Thursday, February 5, 2009

துப்பாக்கிமுனையில் பெண்ணை மிரட்டி கார் கடத்தல்; நெல்லையில் துணிகரம்



நெல்லை: பாளையங்கோட்டை பள்ளி கூடத்தில் இருந்து குழந்தையை அழைத்து வர சென்ற பெண்ணை துப்பாக்கிமுனையில் மிரட்டி கார் திருடி செல்லப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாளையங்கோட்டை மகாராஜா நகர் 23வது குறுக்கு தெருவில் குடியிருந்து வருபவர் நவாசியா. இவரது கணவர் பிலால் அமகது, சவுதி அரேபியாவில் டாக்டராக பணியாற்றுகிறார். இவர்களது குழந்தைகள் அல்சியா, பாத்திமா, சீமாபாய், யாசீர் அகமது ஆகியோர் பாளையங்கோட்டை கோர்ட் எதிரே உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் படித்து வருகின்றனர்.தினமும் காலை, மாலை வேளைகளில் குழந்தைகளை நவாசியா காரில் அழைத்து செல்வார். நேற்று மாலை 5 மணி அளவில் நவசியா குழந்தைகளே அழைத்து வர தனது தாயார் ஹவ்வாவுடன் காரில் பள்ளிக்கு சென்றார். காரை பள்ளி முன் நிறுத்தியதும், அவரது மகள் அல்சியா பாத்திமா காரில் ஏறி அமர முயன்றார்.அப்போது திடீரென்று டிரைவர் சீட்டில் வந்து அமர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நவாசியாவின் தாயாரை துப்பாக்கியை காட்டி மிரட்டி காரை விட்டு இறங்க செய்தார். கண்ணி்மைக்கும் நேரத்தில் காரை எடுத்துக் கொண்டு பறந்தார்.இந்த காருக்கு பின்னால் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதாவின் கார் நின்றிருந்தது.காரை வாலிபர் ஒருவர் கடத்தி செல்வதை அறிந்த கமிஷனரி்ன் டிரைவர் கடத்தப்பட்ட காரை விரட்டி சென்றார்.மேலும் இதுபற்றிய தகவல் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், சோதனை சாவடிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.கமிஷனர் மஞ்சுநாதா நடந்த சம்பவம் பற்றி நவாசியாவிடமும் மற்றவர்களிடமும் விசாரணை நடத்தினார். தொடர்ந்து காரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

No comments: