
தமிழ் சினிமாவில் அடக்கமாய் இருப்பவர்களே சாதித்துள்ளனர். அதிகமாக `பில்டப்' பண்ணுகிறவர்கள் பெரிய ஆளாக இருக்க முடியாது. பெரிய ஆளாக இருப்பவர்கள் அதிகமாக `பில்டப்' பண்ண மாட்டார்கள், என்று பேசியுள்ளார் நடிகர் சிம்பு.
பிரமிட் சாய்மீரா வழங்க, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்த `சரோஜா' படத்தின் 100வது நாள் விழா, சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது.
விழாவில் கவிஞர் வாலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
என்னிடம், எப்படி இன்னும் இளமையாக பாட்டு எழுதறீங்க? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க என்பார்கள். இளமையை உடலில் கொண்டு வர முடியாது. உள்ளத்தில் கொண்டு வரலாம். அதான் என் பாடல்களின் இளமை ரகசியம்... வேற ஒண்ணுமில்லை.
இந்த படத்தை டைரக்டு செய்த வெங்கட்பிரபு, தமிழ் திரையுலகில் மிகப்பெரிய டைரக்டராக வருவார் என்றார் வாலி.
பின்னர் நடிகர் சிம்பு பேசினார்:
தமிழ் சினிமாவில் அடக்கமாய் இருப்பவர்களே சாதித்துள்ளனர். அதிகமாக `பில்டப்' பண்ணுகிறவர்கள் பெரிய ஆளாக இருக்க முடியாது. பெரிய ஆளாக இருப்பவர்கள் அதிகமாக `பில்டப்' பண்ண மாட்டார்கள் இதற்கு உதாரணமாக ஏ.ஆர்.ரகுமானைக் குறிப்பிடலாம். அவருடைய தன்னடக்கத்துக்குத்தான் ஆஸ்காருக்கு இணையான `கோல்டன் குளோப்' விருது கிடைத்து இருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானை அடுத்து தன்னடக்கமான இசையமைப்பாளர், யுவன்சங்கர்ராஜாதான். கோல்டன் குளோப் போன்ற விருதுகளை பெற தகுதியானவர் ஏ.ஆர்.ரகுமானை அடுத்து யுவன் தான் என்றார் சிம்பு.
விழாவில் டைரக்டர்கள் கே.பாலசந்தர், கே.எஸ்.ரவிகுமார், தரணி, ஜெயம் ராஜா, நடிகர்கள் சூர்யா, ஸ்ரீகாந்த், நடிகைகள் ஸ்னேகா, அம்பிகா உள்பட பலர் பங்கேற்றனர்.
பட அதிபர்கள் கே.எஸ்.சீனிவாசன், எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டு படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கு கேடயங்களை வழங்கினார்கள்.
பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, நடிகைகள் சங்கீதா, சந்தியா, விஜயலட்சுமி ஆகியோரும் விழாவுக்கு வந்திருந்தனர்.

No comments:
Post a Comment